ஐந்தொழுக்க பண்பாடு அதன் பயன்களும் வேதாத்திரி மகரிஷி கூற்று

வாழ்வில் அனுபவங்களாகக் காண்பது இன்பம், துன்பம் எனும் இரண்டு உணர்வுகளே ஆகும். இவ்விரண்டில், மனிதனுக்கு ஒவ்வாதது துன்பம். இன்பமோ, இனிமையாகவும் ஒத்து வரக்கூடியதாகவும் உள்ளது. ஆகவே, துன்பங்கள் கடந்த இன்பங்களை அனுபவிப்பதற்கு வழிமுறைகளைச் சிந்தனையாளர்கள் தேடினார்கள். உணர்ந்தார்கள். அவற்றையெல்லாம் மொழி வழியில் விளக்கிச் சொன்ன முயற்சியால் தோன்றியவைதான் வேதங்கள் என்றும், இலக்கியங்கள் என்றும், புராணங்கள் என்றும் பேசப்படுகின்றன.

ஆதிகால மனிதனுக்கும் இத்தகைய வாழ்க்கைப் பண்பாடுகளை உணர்ந்து பின்பற்றி வாழுகின்ற மனிதர்கட்கும் முக்கியமான வித்தியாசங்களாக, உணவு உற்பத்தியில் தொடங்கி, வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழ வேண்டும் என்ற வழியில் பற்பல செயல்கள் விளைந்தன. அவையாவும் விஞ்ஞானமாக உயர்ந்து வந்திருக்கின்றன.

கூடி வாழுகின்ற முறையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களை அரசாட்சி என்றும், ஆட்சிச் சட்டங்கள் என்றும் கூறுகிறோம். இந்த ஆட்சி முறையும், சட்டங்களும் உலகில் மனிதன் வாழுகின்ற இடங்களின் வெட்ப தட்ப நிலைமைகளுக்கேற்ப வேறுபட்டிருக்கின்றன என்றாலும் இவையெல்லாம் ஆட்சிமுறைகளேயாகும்.

மேலும், மனிதன் சிந்தனையில் இயற்கையைப் பற்றி, கடவுளைப் பற்றி ஆராய்ந்து தெளிந்த கருத்துக்கள் அத்தனையையும் தொகுத்தவர்கள் அவற்றை வேதங்கள், இலக்கியங்கள், புராணங்கள் என்று கூறியுள்ளார்கள். இவையெல்லாம் மனிதன் வாழ்வதற்கு வழிகாட்டிய கருத்துக்கள் உருவாகி, மூன்றாவது மனித இனப் பண்பாடாக மதங்கள் உருவாயின, பின்பற்றப்படுகின்றன.

காலத்தாலும், இடத்தாலும் ஆதி மனிதகாலம் தொட்டு இன்று வரையில் பல்லாயிரம் தலைமுறைகள் சென்று விட்டன. என்றாலும் அந்தந்த இடத்தில், அந்தந்த காலத்தில் தோன்றிய கருத்துக்களும், செயல்களும் மனித இனப் பண்பாடாகவே, தலைமுறைகளின் தொடர்பாக, சமுதாயத்தில் பின்பற்றப்பட்டு வந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு காலத்தில், ஓர் இடத்தில், ஒரு சந்தர்ப்பத்தில் அவசியமாகத் தோன்றிய கருத்தோ, செயலோ எக்காலத்தும் எந்த இடத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருத்தமாக அமையுமெனச் சொல்ல முடியாது. பொருத்தமற்ற செயல்களையும், கருத்துக்களையும் பழக்கத்தால் பழைய பண்பாட்டு முறையால் தொடர்ந்து மனிதன் பின்பற்றி வாழுகின்ற போது, பல சிக்கல்கள் தோன்றுகின்றன. ஆகவே அவற்றை மனித குலம் மாற்றி அமைத்துக் கொண்டு வாழ வேண்டும்.

வேதாத்திரி மகரிஷியின் சிந்தனையும், விளக்கமும் என்னவென்றால், இயற்கையில் எல்லாம் சரியாகவே அமைந்து, அனைத்துமே முறையாக நடந்து வருகின்றன. மனிதனின் செயலுக்கு ஏற்றபடி அவ்வப்போது உரிய பொருத்தமான விளைவும் கிடைத்து வருகின்றன. எனினும் ஏன் மனித குலத்தில் இக்காலத்தில் நிலவுகின்ற இத்தனை துன்பங்கள் உருவாயின? அவை தொடர்ந்து எங்கும் பரவி வருகின்றன?

இதை வேதாத்திரி மகரிஷி ஆழ்ந்து உருக்கத்தோடு ஆராய்ந்தார். மனித மனம், சுழல் விரைவில் குறைந்து, அமைதி பெறுகின்ற போது தனக்கும் உலக மக்களுக்கும் தேவையான கருத்துகளும் செயல்களும் உருவாகின்றன என்பதை உணர்ந்தேன். இந்த மனஉருக்கத்திலும், ஒடுக்கத்திலும் மலர்ந்த சில கருத்துக்களைக் கவி வடிவில் எழுதியிருக்கிறார்கள். 

“புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும் 

      போதை, போர், பொய், புகை ஒழித்து அமுல் செய்வோம் 

அதிகசுமை ஏதுமில்லை, 1) அவரவர்தம் அறிவின் 

    ஆற்றலினால் உடல் உழைப்பால் வாழ்வதென்ற முடிவும், 

2) மதிபிறழ்ந்து மற்றவர்கள் மனம்உடல் வருத்தா 

      மாநெறியும், 3) உணவுக்குயிர் கொல்லாத நோன்பும், 

4) பொதுவிதியாய்ப் பிறர் பொருளை வாழ்க்கைச் சுதந்திரத்தைப் 

      போற்றிக் காத்தும், 5) பிறர்துன்பம் போக்கும் அன்பும் வேண்டும்.”

ஐந்தொழுக்கப் பண்பாட்டின் விளக்கம் அடுத்த பதிவில் தொடரும்....  https://www.kundaliniyoga.edu.in/blog/Ainthozhukka-Panbaadu-Vilakkam

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746