புலன்கள் வழியே மனம் சென்று, தான் தனது என்று எண்ணி, இன்ப துன்ப வயப்படும்போது தான் துன்பங்கள் எல்லாம் வரும். பாவம் என்னும் - தவறான செயலைச் செய்வதற்குத் துணிவு வரும். அவ்வாறில்லாமல், அறிவு விழிப்பாக இருக்கிற போது இன்னொருவரைத் தாக்கி அவரிடம் இருந்து பொருள் முதலியவற்றைப் பறித்து நான் நன்மையடைய வேண்டும் என்ற எண்ணம் வராது.

ஏனென்றால் “என்னிடம் உள்ள அறிவாகிய அதே இறைநிலை அவரிடமும் இருக்கிறது. நான் தருகின்ற துன்பம் எனக்கே தான் திரும்பி வரும். அவரைத் துன்பப்படுத்தினாலும், என்னுடைய அறிவும் அவருடைய அறிவும் இறைநிலையில் இணைந்து இருக்கிறதானால், இரண்டு பேரும் வருந்துவார்கள்” என்ற திருப்பம் வரும் போதுதான் துன்பம் செய்ய யாருக்கும் மனம் வராது. பொய், சூது, களவு, கொலை, கற்பழிவு என்னும் ஐந்து பெரும் பழிச் செயல்கள் விளையாது.

அமைதியான அலையிலிருந்து தாண்டி, நுணுகிய அலைக்கு மனம் செல்லும் போது, மனமானது சிறிய அளவில் இருந்து இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு இவைகளைத் தாண்டிப் பேரியக்க மண்டலம் முழுமையும் விரிந்து விட்ட பிறகு தான் மன அலைச்சுழலில் எண்ணிக்கை குறைந்து நிலையை நோக்கி வரும். மனம் நிலைக்க முடியாத போது பழக்கத்தால் பீட்டா அலைக்கு (14-40) வந்து விடுகிறது. இதுவரை பழகியிருந்த பழக்கமாகிய 14 லிருந்து 40 அலைக்குரிய எண்ணம் வந்து விடுகிறது.

தவத்தினால் மன அலையைக் குறைத்துப் பழகிப் பழகி மன இயக்கத்திற்குத் தகுந்தவாறு உடலில் உள்ள செல்கள் எல்லாம் ஒழுங்குபட்டுக் கொண்டே வர வேண்டும். அந்த ஒருங்கிணைப்பு வந்தால் தான் மனம் அடங்கி நிற்கிறது. அப்போது தான் உடல் செல்கள் மூலம் தோன்றும் செயலார்வம் அடங்கும்.

உதாரணமாக நாம் மாங்காய் ஊறுகாயை நினைக்கிறோம். மனதால் தான் நினைக்கிறோம். நாக்கில் நீர் ஊறுகிறது. அப்போது மனதினுடைய அலைக்குத் தகுந்தவாறு உடலிலுள்ள செல்களினுடைய இயக்கம் இருக்கும். இவ்வாறு பழக்கத்தின் வழியே இயங்கும் இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்குத் துரிய நிலைத் தவம் உதவும். அதோடு நாம் துரிய தவம் இயற்றும்போது பழவினைகள் தந்த தேவையில்லாத பதிவுகள் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும், எடுத்துவிட முடியும்.

எண்ணங்கள் எழும் போது அவை மூளையில் பதிவாகி அந்தப் பதிவே அறிவாட்சித் தரமாகிறது. மூளையில் உள்ள ஒவ்வொரு செல்லும் அறிவாட்சித் தரத்திற்கு ஒத்துழைக்கக் கூடிய கருவியாக அமைந்துள்ளது. நாம் ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருக்கும் போது ஏற்கனவே ஓர் இருப்பு இருக்கிறதே பதிவாக, அது இந்தாப்பா!” இதுதான் இருக்கிறது; இதைத்தான் நீ சேர்த்து வைத்திருக்கிறாய், எடுத்துக் கொள்” என்று எண்ணங்களாக எடுத்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

இந்நிலையில் புலன்களை உபயோகப்படுத்துகிறோம். இதனால்தான் தவம் தொடங்கிய உடனே எண்ணங்கள் நின்று போவதில்லை, உள்ளேயே அடங்கிப் போகின்றன. மனம் நுண்ணிய அலை நீளத்திற்கு வருகிறது. நுண்ணிய அலை நீளத்துக்கு வந்துவிட்ட மனம் புலன்கள் மூலமாகப் பார்க்கும் போது அந்த அலை பேரலையாக ஆகி விடுவதனால் மனம் அதில் ஈடுபட்டு அதையே வாங்கிக் கொள்கிறது, மூளைக்கு அனுப்புகிறது, பதிய வைக்கிறது. பதிய வைக்கிற வேலையை முக்கியமாக வைத்துக் கொண்டு, மூளை எண்ணங்களை வெளியிடுவது அப்போது தெரிவதில்லை.

நமக்குள்ளாகவே மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது. என்னதான் ஓடினாலும் தொடர்ந்து வருவது அலை தான். இப்போது எந்த அலை வந்தாலும் மோதினாலும் அந்த மோதுதலை எது உணர வேண்டும்? இந்தப் பிரபஞ்சத்திலேயே இருப்பாக உள்ளது, தவிர மோதிய பொருள் மோதிக் கொண்டு தானே இருக்கிறது.


மனம் மோதுகிறது – அறிவு உணர்கிறது. அறிவு(Will) அதனுடைய Extension – Peripheral Function மனம் அவ்வாறு பார்க்கும் போது இந்த வினைகளை நான் செய்திருக்கிறேன். இந்தப் பதிவினால் இந்த எண்ணங்கள் வருகின்றன. இந்த எண்ணங்கள் வேண்டாம். தவறானவை. இந்த எண்ணம் எனக்கு வேண்டாம் என்று திரும்ப திரும்ப அந்த அலைக்கு மாற்று அலையைக் கொடுத்து வினைகளைக் கழிக்கிறோம். அந்த வினைகளை எல்லாம் போக்கக் கூடிய இடம் துரியம் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746